Ayurveda

உலோகம் - அயம், இரும்புச்சத்து - மருந்துகள்

இரும்பு உலோகங்களில் மிகவும் அபரிமிதமாக கிடைக்கக்கூடியது. அயம், அயசு, அயில், இடி, ஈசசெயம், கருங்கொல், கருப்பி, கருமணல், கரும்பொன், கருந்தாது போன்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. மலைகளில் தனியாகவும், கந்தகம் சேர்ந்தும் இரும்பு கிடைக்கிறது. இரும்பு பொதுவாக உடல் தேற்றியாகவும், குருதிப்பெருக்கவும், பசி உண்டாக்கவும் பயன்படுகிறது.

காந்தம், கெந்திச்செம்பு, சூடான், செம்பு, தங்கம், நாகம், பூநாகம், பூரம், மயூரச்செம்பு, வெள்ளி போன்றவை இரும்பின் நட்புச் சரக்குகள். அண்டவோடு, அப்பிரகம், கெந்தகம், கௌரி பாஷாணம், சவ்வீரம், சிங்கி, சிலாசத்து, தரா, நிமிளை, வங்கம், வெண்கலம், வெள்ளைப்பாஷாணம், வெண்காரம் போன்றவை இரும்பின் பகைச் சரக்குகள் ஆகும்.

மனித உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, பச்சைக் காய்கறிகள், கீரைகள், உலர் திராட்சை, பேரீச்சம்பழம், இறைச்சி, மாதுளம்பழம், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது. இருப்பினும் சில நேரங்களில், சிலரின் உடலுக்கு இரும்பு மருந்தாக தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு வரும்பொழுது பாண்டு, வெண்குஷ்டம், உடல்பருமன், ரத்தசோகை, மந்தம், காமாலை, குன்மம், சுக்கில நட்டம், கழிச்சல், எடை குறைதல் போன்ற வியாதிகள் வரும்.

இளைத்தவனுக்கு எள் கொடு, கொழுத்தவனுக்கு கொள் கொடு, என்று ஒரு முதுமொழி நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் சித்தர்கள் கூற்றுப்படி இளைத்தவர் இரும்பை உண்ணவேண்டும் என்பதாகும். அவர்கள், "எய்ப்புடற் கிரும்பை யுண்மின்" என்று கூறி இருக்கிறார்கள்.

இங்கே ஒரு விஷயம் நாம் கவனிக்கவேண்டும். மேலே குறிப்பிட்ட விஷயங்களை கவனமாக படித்து பார்த்தல், உடல் பருமனுக்கும், உடல் இளைத்து போவதற்கும் இரும்புச் சத்து எவ்வாறு காரணமாக இருக்க முடியும்? என்ற கேள்வி நமக்குள் வரும்.

ஆனால், உண்மையில் இரும்புச் சத்து குறைபாட்டால்தான் இந்த இரு வியாதிகளும் வரும்.

இரும்புச் சத்து குறைபாட்டால், கார்போஹைடிரேட் எரிதல் குறைந்து, ரத்தச் சர்க்கரை அளவு கூடுதலாகி, அதன் மூலம் உடல்பருமன் வருகிறது. மற்றொருபுறம் இரும்புச் சத்து குறைபாட்டால், உடலின் தசை அளவு குறைகிறது. அதனால், உடல் தசை பலமற்று போகிறது. உடல் எடை குறைகிறது. ஆகவே சரியான இரும்புச் சத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உடலுக்கு இரும்புசத்து அவசியமான நேரத்தில், இரும்பினால் செய்யப்படும் பற்பம், செந்தூரம், களங்கு, மெழுகு, வடகம் வகை மருந்துகளை உட்கொள்ளலாம். நமது உடலினால் இரும்பை நேரடியாக செரித்து, கிரகிக்க முடியாது என்பதால் இரும்பை பற்பம், செந்தூரம் வகை மருந்துகளாக உப்புக்களாக்க பட்டு, இரும்பு அயனிகளாக உடலுக்கு கொடுக்கப்பட்டன.

அயபற்பம், தேன் மற்றும் சர்க்கரையை அனுபானமாக கொண்டு பொதுவாக தரப்படுகிறது. அதேநேரம் அய செந்தூரம் திப்பிலி மற்றும் மிளகு சேர்த்து தரப்படுகிறது. மேற்கண்ட நோய்கள் தவிர, வாதநோய்களான வாதப்பிடிப்பு, பித்தபிரமை, நடுக்குவாதம், சுவேதவாதம், இழுப்புவாதம், மற்றும் சளி, எலும்புருக்கி, நேத்திரவாயு போன்ற பிரச்சனைகளுக்கும் இரும்பின் மருந்துகள் தரப்படுகின்றன.

அதே நேரம், அய பற்பத்தை இஞ்சிரசம், மிளகு ரசம், கள், கருப்பஞ்சாறு, திராட்சை ரசம், சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், நெய், பால், முலைப்பால், கஞ்சித்தண்ணீர், மூங்கிலரிசி பாயாசம், சிறுநீர், வெந்நீர், உமிழ்நீர், துளசிச்சாறு, வெற்றிலைச் சாறு போன்ற வெவ்வேறு பொருட்களுடன் வெவ்வேறு வியாதிகளுக்கு தரப்படுகின்றன.

இரும்பின் மருந்துகளை பொறுத்தவரையில் பற்பம் முழு வீரியத்துடனும், செந்தூரம் முக்கால் வீரியத்துடனும், மற்ற களங்கு, மெழுகு வகை மருந்துகள் அரை வீரியத்துடனும் செயல்படுகின்றன. ஏனெனில் நமது உடல் உட்கிரகிக்கும் இரும்பு அயனிகள் அளவு அயபற்பத்தில் மட்டுமே 80%க்கு மேல் இருக்கிறது.