
ஓரிலை வேர் " >
ஓரிலை வேர்
ஓரிலை என்று தமிழிலும், Prishniparni என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படும் இந்த மூலிகையின் தாவரவியல் பெயர் Uraria Picta. இது இருமல், உடல் குளிர்ச்சி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் இதில் நுண்ணுயிர்க் கொல்லி தன்மைகளும், வலிநீக்கி தன்மைகளும், கட்டிகள் மற்றும் வீக்கங்களை குணப்படுத்தும் தன்மைகளும், நெஞ்செரிச்சல் மற்றும் சுவாசப்பிரச்சனைகளை சரிப்படுத்தும் தன்மைகளும் உள்ளன.
தசமூலத்தில் இருக்கும் பத்து வேர்களிலும் எலும்பு சார்ந்த குணப்படுத்தும் தன்மைகளை கொண்டது இந்த வேர் மட்டுமே. மேலும் சாரகர், சுஷ்ருதர் போன்ற பழம்பெரும் வைத்தியர்களும் இம்மூலிகையை பற்றி ஆராய்ந்து கூறி இருக்கிறார்கள். தசமூலத்தில் மட்டுமல்லாது தனியாகவும் ஓரிலை வேர் சூரணமாக, சூப்புடன் சேர்த்து எலும்பு முறிவு குணமாக ஆதி காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. தசமூலத்தில் எலும்பு சார்ந்த விஷயங்களை குணப்படுத்தும் பொருளாக, எலும்பை பலப்படுத்தும் பொருளாக இந்த வேர் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்.
முள்ளுக்கத்தரி வேர்
முள்ளுக்கத்தரி என்று தமிழில் அழைக்கப்படும் இதன் சமஸ்கிருதப் பெயர் Brihati. இதன் தாவரவியல் பெயர் Solanum Indicum. ஆனைச்சுண்டை, பப்பரமல்லி என்ற வேறு பெயர்களிலும் தமிழில் அழைக்கப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல், கபம் சார்ந்த மற்ற பிரச்சனைகள், தொண்டை வறட்சி, ஆஸ்த்மா போன்றவற்றை சரி செய்வதில் முள்ளுக்கத்தரி பழமும், வேர்களும் பிரசித்தி பெற்றவை.
பொதுவாகவே கத்தரி குடும்பத்தை சார்ந்த முள்ளுக்கத்தரி, கண்டங்கத்திரி, தூதுவளை போன்ற அனைத்தும் இம்மாதிரி கபம் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்த படுகின்றன. மேலும் இது பசித்தூண்டியாகவும், செரிமானத் தூண்டியாகவும் தனது வேலையை ஆரம்பித்து சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த பிரச்சனைகளையும், காய்ச்சல் போன்ற வாதம் சார்ந்த பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
கண்டங்கத்தரி வேர்
தமிழில் கண்டங்கத்தரி என்றும் ஆங்கிலத்தில் Yellow Fruit Nightshade என்றும் அழைக்கப்படும் இந்த மூலிகையின் சமஸ்கிருதப் பெயர் Kantakari. அனைத்து வகையான காய்ச்சலுக்கும், இருமல், சளி போன்ற கபம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. தசமூலத்தில் இதன் வேர்தான் சேர்க்கப்படுகிறது என்றாலும் கூட கண்டங்கத்தரியின் எல்லா தாவர உறுப்புகளுக்கும் கபம் சார்ந்த வியாதிகளை போக்கும் தன்மை உள்ளது. குறிப்பாக கண்டங்கத்தரி பழம் கபம், கபசுரம் சார்ந்த வியாதி மருந்துகளில் முக்கிய பொருளாக இருக்கிறது.
சளி, அதனால் வரும் இருமல், அதனால் வரும் நெஞ்சுவலிக்கு கண்டங்கத்தரி பழம் நல்ல மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வீக்கங்கள், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்பொருமல், தொண்டை அழற்சி, விக்கல், பசியின்மை, வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு கண்டங்கத்தரி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
நெருஞ்சில் வேர்
சிறு நெருஞ்சில் என்று தமிழில் அழைக்கப்படும் இது ஒரு பூண்டுத் தாவரம். ஆங்கிலத்தில் Caltrops என்றும் சமஸ்கிருதத்தில் Gokhru என்றும் இது அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Tribulus Terrestris.
வயிற்றுப் பூச்சிகளை கொல்லவும், சிறுநீரைப் பெருக்கி சிறுநீரகக் கற்களை கரைக்கவும், இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ஆண்மைக்கான ஹார்மோன் உற்பத்தியை அதிகப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்தல் மூலம் ஆண்மைக்குறைவை நிவர்த்தி செய்யவும் என்று பல வழிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
நெருஞ்சில் வேர் மற்றும் சுக்கு சேர்த்து கஷாயமாக சாப்பிடும்பொழுது ஆமைவாதம் போன்ற கடுமையான வாதப் பிரச்சனைகள் கூட சரியாகின்றன. ஆனால் தற்பொழுது பெரும்பாலும் இதை சிறுநீரக கல்லை கரைக்கவும், ஆண்மைக்குறைவுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.
தசமூலக்குடிநீரில் சேரும் அனைத்து வேர்களின் பண்புகளையும் மொத்தமாக பார்க்கும் பொழுது, பெரும்பாலானா மூலிகைகளில் காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி போன்ற வாதம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை இருக்கிறதை நம் அறிந்து கொள்ளலாம். அதே நேரம் கபம் சார்ந்த வியாதிகளை சரி செய்யும் பண்புகளும் அதிகம் இருக்கினறன.
ஆரம்பத்தில் நமது பதிவில் சொன்னது போல, ஒரு குறிப்பிட்ட வியாதியை சரி செய்யும் பல மூலிகைகளை ஒன்றாக சேர்த்து ஒரு மருந்து தயார் செய்யும்பொழுது அந்த மருந்து பொருட்களின் கூட்டு முயற்சியாலும், அவற்றின் வீரியத்தாலும் மனித உடல் இயல்பாகவும், விரைவிலும் குணமடைகிறது.
இந்த அனைத்திலும் இருக்கும் மற்றுமொரு முக்கிய பண்பு நுண்ணுயிர் எதிர்ப்பு திறனும், ஆக்ஜிசனேற்ற தடுப்பு செயல்படும்தான். இம்மாதிரி சிறப்பான பல மருத்துவக்குணங்களை கொண்ட இந்த பத்து வேர்களும் பலவிதமான வியாதிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகின்றன.